×

கோர்ட்டில் ஆஜர்படுத்தி திரும்பிய போது தஞ்சையில் போலீசாரிடமிருந்து தப்பியோடிய கைதி மீண்டும் கைது

தஞ்சை,நவ.30: தஞ்சையில் சிறுநீர் கழிப்பதாக கூறிவிட்டு, தப்பியோடிய கைதியை, போலீசார் நேற்று முன் தினம் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் மேலமருதுார் கிராமத்தை சேரந்தவர் ராஜ்குமார் (51), இரு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் சில மாதங்களுக்கு முன்பு மணப்பாறை போலீசாரால், கைது செய்யப்பட்டு முசிறி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரிடமிருந்து 70 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், ஒரு வழக்கு தொடர்பாக ராஜ்குமாரை போலீசார், கடந்த 18ம்தேதி, நாகப்பட்டினம் முதலாவது குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்திட்டு, அவரை மீண்டும் முசிறி சிறைக்கு அன்று இரவு பேருந்து மூலம் அழைத்து சென்றனர். தஞ்சை, புதிய பேருந்து நிலையத்தில் இரவு 8.45 மணியளவில் இறங்கி, திருச்சி பேருந்துக்கு மாறும் போது, போலீசாரிடம் சிறுநீர் கழிப்பதாக கூறி தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்து, தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை தஞ்சை - பட்டுக்கோட்டை பைபாஸ் சாலையில் பேருந்துக்காக ராஜ்குமார் காத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார், அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.விசாரணையில், புதுப்பட்டினம் பகுதியில் உள்ள தனது கள்ளக்காதலியின் வீட்டில் நேற்றுமுன்தினம் இரவு தங்கி விட்டு, மதுரை செல்ல காத்திருந்தது தெரியவந்தது.

Tags : prisoner ,court ,Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் 100%...