செல்போன் திருடியவர் கைது

ஈரோடு, நவ. 30: ஈரோடு அடுத்த லக்காபுரம் முத்துக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் தனபால் (29). தொழிலாளி. தனபால் நேற்று முன்தினம் மாலை அவரது நண்பர் பார்த்திபன் என்பவருடன் ஈரோடு சவிதா பஸ் ஸ்டாப்பில் இருந்து லக்காபுரம் செல்வதற்காக டவுன் பஸ் ஏறினர்.தனபால் அருகில் நின்றிருந்த மர்மநபர், தனபாலின் மேல் பாக்கெட்டில் இருந்த செல்போனை திருடிக்கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார். தொடர்ந்து தனபால், நண்பர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அந்த நபரை மடக்கி பிடித்து ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், அந்த நபர், ஈரோடு கருங்கல்பாளையம் கே.என்.கே. ரோட்டை சேர்ந்த குமார் என்ற ஜெகதீஷ் (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஜெகதீஷை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

Related Stories: