நெல்லை, நவ. 30: திருக்கார்த்திகை திருநாளையொட்டி நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் சொக்கப்பனை முக்கில் சுமார் 21 அடி உயரத்தில் தீபம் ஏற்றப்பட்டது. தமிழகத்தில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். இந்தாண்டு கடந்த 16ம் தேதி கார்த்திகை மாதம் பிறந்தது. அன்று முதல் தினமும் வீட்டு வாசலில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி வந்தனர். கார்த்திகை மாதத்தின் முக்கிய நாளான திருக்கார்த்திகை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. திருக்கார்த்திகை தீப விழாவை யொட்டி நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயில் சுவாமி சன்னதி நந்தி சிலை முன்பு, அணையா தீபமாக பரணி தீபம் நேற்று முன்தினம் இரவு ஏற்றப்பட்டது.
இதனையடுத்து இந்த பரணி தீபம் நேற்றிரவு 6.15 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி சன்னதி தெருவிலுள்ள சொக்கப்பனை முக்கிற்கு கொண்டு வரப்பட்டது. சுமார் 21 அடி உயரமுள்ள சொக்கப்பனையில் தீபம் ஏற்றப்பட்டது.