சேலம், நவ.30: கனரக வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துதல், ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர். இது குறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் நாடு முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் பல்வேறு தொழில்கள் முடங்கிய நிலையில் உள்ளது. ஒளிரும் பட்டைகள் 11 தயாரிப்பு நிறுவனங்கள் உள்ள நிலையில், 2 நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியதற்கு எதிராக நீதிமன்றத்தில் தடையுத்தரவு வழங்கியதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். வெளிச்சந்தைகளில் தரமான ஒளிரும் பட்டைகள் அதிகபட்சமாக ₹1200 முதல் கிடைக்கும் நிலையில், அரசு ஆணையில் குறிப்பிடப்பட்ட நிறுவனங்களின் விலை, வாகனத்தின் நீளத்தை பொறுத்து அதிகபட்சமாக ₹6000 முதல் ₹8000 வரை விற்கப்படுகிறது. ஜிபிஎஸ் கருவிகளை குறிப்பிட்ட நிறுவனங்களின் கருவிகளை பொருத்த வேண்டும் என போக்குவரத்து ஆணையரால் உத்தரவிட்டுள்ளது.