×

ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் விவகாரம் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி ஆர்டிஓ.,க்களிடம் மனு

சேலம், நவ.30: கனரக வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துதல், ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர். இது குறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் நாடு முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் பல்வேறு தொழில்கள் முடங்கிய நிலையில் உள்ளது. ஒளிரும் பட்டைகள் 11 தயாரிப்பு நிறுவனங்கள் உள்ள நிலையில், 2 நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியதற்கு எதிராக நீதிமன்றத்தில் தடையுத்தரவு வழங்கியதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். வெளிச்சந்தைகளில் தரமான ஒளிரும் பட்டைகள் அதிகபட்சமாக ₹1200 முதல் கிடைக்கும் நிலையில், அரசு ஆணையில் குறிப்பிடப்பட்ட நிறுவனங்களின் விலை, வாகனத்தின் நீளத்தை பொறுத்து அதிகபட்சமாக ₹6000 முதல் ₹8000 வரை விற்கப்படுகிறது. ஜிபிஎஸ் கருவிகளை குறிப்பிட்ட நிறுவனங்களின் கருவிகளை பொருத்த வேண்டும் என போக்குவரத்து ஆணையரால் உத்தரவிட்டுள்ளது.

140 நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், வெறும் 8 நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே ₹3000 முதல் ₹4000 வரை செலவு செய்து, ஜிபிஎஸ் பொருத்தியுள்ள நிலையில், குறிப்பிட்ட நிறுவனங்களின் கருவிகள் விலை ₹15,000 முதல் ₹20,000 வரை விற்கப்படுகிறது. எனவே, போக்குவரத்து ஆணையரின் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (30ம் தேதி) காலை 11 மணிக்கு சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், கந்தம்பட்டியில் உள்ள துணை போக்குவரத்து ஆணையர், சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலரிடம் மனு அளிக்கவுள்ளனர்.

Tags :
× RELATED டூவீலர் திருடியவர் கைது