சாலிகுளம் கண்மாயில் மறுகால் உடைப்பால் வீணாக செல்லும் தண்ணீர் சண்முகையா எம்எல்ஏ ஆய்வு

ஓட்டப்பிடாரம், நவ. 27:   பாஞ்சாலங்குறிச்சி சிலோன் காலனி பகுதியில் உள்ள சாலிகுளம் கண்மாயில் மறுகால் உடைப்பால் தண்ணீர் வீணாகச் செல்வதை சண்முகையா எம்எல்ஏ பாார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  பாஞ்சாலங்குறிச்சி சிலோன் காலனி பகுதியில் யூனியனுக்கு சொந்தமான  சாலி குளத்தை சுற்றிலும்  அதன் கரைப் பகுதிகள் உள்ளிட்ட பல இடங்கள்  வனத்துறைக்கு சொந்தமானதாகும். இக்குளத்தின் மறுகால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவர் ஆனது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் உடைப்பு ஏற்பட்டது. பின்னர் மழை சரியாகப் பெய்யாததால் குளம் சீராக நிரம்பவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த தொடர் மழையால் இக்குளம் நிரம்பியதோடு வலுவிழந்து காணப்பட்ட அதன் கரைகளில் உடைப்பு  ஏற்பட்டது. இதனால் அதிகப்படியான வெள்ளமானது விளைநிலங்கள் வழியாகச் சென்றதால் உளுந்து உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சேதமடைந்தன. தகவலறிந்ததும் சண்முகையா எம்எல்ஏ குளத்தைப் பார்வையிட்டார்.

குறிப்பாக உடைப்பு ஏற்பட்ட மறுகால் பகுதியையும் மழைநீர் வீணாக சென்ற பகுதியையும் சேதமடைந்த விளைநிலங்களையும் பார்வையிட்டு அங்கு வந்திருந்த யூனியன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் கரைகளை பலப்படுத்துவது குறித்து வனத்துறை அதிகாரியிடம் பேசவும் உடைப்பு ஏற்பட்ட மறுகால் பகுதியை உடனே கட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். ஆய்வின்போது ஓட்டப்பிடாரம் பிடிஓ ஹெலன் பொன்மணி, யூனியன் கவுன்சிலர் சுகுமார் தங்கரத்தினம், திமுக கிளைச் செயலாளர்கள் ராஜா, ஆறுமுகவேல், பெருமாள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட யூனியன் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Related Stories: