×

ஏர்வாடி அருகே எல்இடி டி.வி. தருவதாக பெண்ணிடம் நூதன மோசடி 2 பேர் கைது

ஏர்வாடி, நவ. 27: ஏர்வாடி அருகே கொரோனா தள்ளுபடி விலையில் எல்இடி. டி.வி. தருவதாக பெண்ணிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஏர்வாடி அருகேயுள்ள வேப்பங்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் நயினார் மனைவி தனலட்சுமி(29). சம்பவத்தன்று இவரது வீட்டிற்கு வந்த இருவர், தாங்கள் காஸ் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், தற்போது கொரோனா தொற்று கால தள்ளுபடியாக எல்இடி டி.வி. பரிசாக தர உள்ளதாகவும், அதற்கு ரூ.4,500 செலுத்துமாறு கூறி உள்ளனர். இதனை நம்பிய தனலட்சுமி ரூ.4,500 கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட இருவரும் எல்இடி டிவியை எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்றனர்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் திரும்பி வரவில்லை.

மர்மநபர்கள் தன்னை ஏமாற்றி பணம் பறித்து சென்றதை அறிந்த தனலட்சுமி இதுகுறித்து ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன மோசடியில் ஈடுபட்ட மகாதேவன்குளம் கீரைக்காரன்தட்டு பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து (48), சுடலைக்கண்ணு (52) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Ervadi 2 ,
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...