காரைக்குடி, நவ.27: கோ.வேலங்குடியில் சர்வதேச தரத்தில் மின்னொளி கால்பந்து மைதானம் அமைக்கப்படும் என முன்னாள் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ தெரிவித்தார்.காரைக்குடி அருகே கோ.வேலங்குடியில் செலக்டட் புளூஸ் கால்பந்து கழகம் சார்பில் 65ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து போட்டியின் பரிசளிப்பு விழா நடந்தது. சீனிவாசன் வரவேற்றார். தொழிலதிபர் படிக்காசு, சந்திரன், முன்னாள் எம்எல்ஏ சுபதுரைராஜ், கிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கி முன்னாள் அமைச்சர், திமுக மாவட்ட செயலாளர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ பேசுகையில், ‘‘தமிழகத்திலேயே இப்பகுதியில் தான் அதிக அளவில் கால்பந்து வீரர்கள் உள்ளது பாராட்டக்கூடியது.
ஏற்கனவே இந்த கால்பந்து மைதானத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு கேலரி கட்டப்பட்டது. திமுக ஆட்சி வந்தவுடன் முதல் நடவடிக்கையாக இப்பகுதியில் உடனடியாக சர்வதேச தரத்தில் மின்னொளி மைதானம் மற்றும் புல் தரை நிச்சயம் அமைக்கப்படும்’’ என்றார். தமிழ்நாடு குத்துச்சண்டை கழக தலைவர் பொன்பாஸ்கரன், முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி, திமுக சட்டபாதுகாப்பு குழு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், தொழிலதிபர் பெரியசாமி, சுப்பையா, போஸ், சூரக்குடி ஊராட்சி தலைவர் முருகப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிவகங்கை மாவட்ட கால்பந்து கழக தலைவர் ஆனந்த் நன்றி கூறினார்.