×

இலவச மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை, நவ.27: நீர்ப்பாசன வங்கிக்கடன் பெற்ற விவசாயிகள் இலவச விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் மானியத்துடன் கூடிய நீர்ப்பாசன கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெற்று ஆழ்துளை கிணறு அமைத்து அதற்கு இணையான மானியத்தொகை பெற்ற பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் இலவச மின் இணைப்பு பெறுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இலவச மின் இணைப்பு பெற கடன் மற்றும் மானியம் பெற்றதற்கான வங்கி புத்தக நகல், இலவச மின் இணைப்பு வழங்கக் கோரி மின் பகிர்மான பதிவு செய்த அட்டை நகல், 10(1) சிட்டா ஆகிய ஆவணங்களை இணைத்து சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் அளிக்க வேண்டும். கூடுதல் தகவல்களை sivaganga.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...