மதுரை, நவ. 27: அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இயக்கக் கோரி, கரும்பு விவசாயிகள் நேற்று கரும்புகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்ட அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவையை துவக்க வேண்டும். 2 ஆண்டுக்கான கரும்புக்கு பாக்கி ரூ.19 கோடியே 90 லட்சத்தையும், லாபத்தின் பங்கு ஒரு கோடி ரூபாயையும் சேர்த்து மொத்தம் ரூ.20 கோடியே 90 லட்சத்தை கரும்பு விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட, அண்ணா பஸ்ஸ்டாண்ட் அருகே திரண்டனர்.இப்போராட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் பழனிச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் கதிரேசன், மாநிலக்குழு உறுப்பினர் கருப்பையா உள்ளிட்ட கரும்பு விவசாயிகள் கரும்புகளுடன் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், ஏற்பட்டது. உடனே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனை போலீசார் தடுத்தனர், அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையும் மீறி, விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பழனிச்சாமி உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.