சீர்காழி, நவ.27: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நிவர் புயல் காரணமாக நேற்றுமுன்தினம் பெய்த கனமழையால் கடலோரம் அமைந்துள்ள நான்கு தெருக்களின் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பெரும் சிரமத்துடனே தங்கள் தெருக்களை கடந்து பிரதான சாலைக்கு வந்து செல்கின்றனர். நிவர் புயல் தாக்கத்தால் கடல் சீற்றம் ஏற்பட்டதாலும், போதிய வடிகால் வசதி இல்லாததாலும், மழைநீர் வடியாமல் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ளதாக பாதிக்கபட்ட மக்கள் தெரிவித்தனர். நேற்று காலை முதல் கடல் சீற்றம் மற்றும் மழையும் இல்லாததால் தண்ணீரை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.