×

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சமையல் காஸ் கசிந்து தீப்பிடித்து தம்பதி பலி

பாப்பிரெட்டிப்பட்டி, நவ.27: பாப்பிரெட்டிபட்டி அருகே, சமையல் காஸ் கசிந்து தீப்பிடித்து கணவன், மனைவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே, வரதகவுண்டனூரை சேர்ந்தவர் வெங்கடாசலம் (77) விவசாயி. இவரது மனைவி ராமாயி (75). உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 4 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமான நிலையில், வெங்கடாசலம், ராமாயி தனியாக வசித்து வருகின்றனர்.   நேற்று மாலை வீட்டில் சமையல் செய்ய வெங்கடாசலம் சமையலறையில் காஸ் பற்ற வைத்த போது திடீரென தீ பிடித்தது. இதில் வீடு முழுவதும் தீ பற்றி எரிந்தது. ஏற்கனவே காஸ் கசிந்து வீடு முழுவதும் பரவி இருந்த நிலையில் அதனை அறியாமல் தீ பற்ற வைத்ததால் தீப்பிடித்துள்ளது. தகவலின் பேரில், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இச்சம்பவத்தில் படுத்த படுக்கையாக கிடந்த ராமாயி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் காயமடைந்த வெங்கடாசலத்தை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இரவு 7 மணிக்கு இறந்தார். இது குறித்து பாப்பிரெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Cooking gas leak ,Papirettipatti ,
× RELATED தீரன் சின்னமலை சிலைக்கு மாலை