கிருஷ்ணகிரி, நவ.27: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 39 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலம் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருவதாக கலெக்டர் தெரிவித்தார். காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஸ்மார்ட் வகுப்பறையை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பள்ளியில், சுற்றுப்புற தூய்மை, வகுப்பறைகள், ஐடெக் லேப், ஸ்மார்ட் கிளாஸ், ஏடிஎல் லேப், மத்திய அரசினால் வழங்கப்பட்ட ஆட்டோமேட்டிக் லேப், வேளாண் துறை லேப், மூலிகை தோட்டம், குடிநீர், கழிப்பறை வசதிகளை பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘மாவட்டத்தில் 4 மாதிரி பள்ளிகள், காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஓசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெத்தகொண்டப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 39 அரசு பள்ளிகளில், ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் 2 ஏடிஎல் லேப் மூலம், மாணவர்களுக்கு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்படுகிறது. இதன்மூலம் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்,’ என்றார்.ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், தலைமையாசிரியர் வளர்மதி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.