சட்டமன்ற தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் வெற்றி கூட்டணி தொடரும்

திருச்சி, நவ.25: திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி கூட்டணி. இந்தக் கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடரும், வெற்றியும் பெறும் என காங்கிரஸ் திருச்சி எம்பி திருநாவுக்கரசர் கூறினார். மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் எந்த முடிவு எடுத்தாலும் அது சட்டப்படியான முடிவாகத்தான் இருக்க வேண்டும் என்பது தான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. இதுவரை அந்த விவகாரத்தில் ஆளுநர் ஏன் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதை ஆளுநரை தான் கேட்க வேண்டும்.

திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி கூட்டணி. இந்த கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடரும். வெற்றியும் பெறும். கூட்டணியிலிருந்து வெளியேறி 3வது அணி, 4வது அணி அமைப்பது என்கிற பிரச்னையெல்லாம் இல்லை. அரசியல்வாதிகளின் பிள்ளைகள் அரசியலுக்கு வர கூடாது என எந்த சட்டமும் கிடையாது. ஆளுங்கட்சியினர் மக்களை சந்திக்கலாம், எதிர்கட்சியினர் மக்களை சந்திக்க போகக்கூடாதா? மக்களை சந்திக்க செல்லும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியை தடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அமைச்சர்கள் மக்களை சந்திக்கும்போது எதிர்கட்சியினர் மக்களை சந்தித்தால் எதிர்கட்சியினர் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: