×

ஆறுகளில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்வதற்கு 83 இடங்களில் 1.42 லட்சம் மணல் மூட்டைகள் தயார் நிவர் புயலை எதிர்கொள்ள முன்னேற்பாடு பணி தீவிரம்

தஞ்சை, நவ. 25: தஞ்சை மாவட்டத்தில் ஆறுகளில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்வதற்காக 83 இடங்களில் 1,42,998 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் நிவர் புயலை எதிர்கொள்ள முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள பேரிடர் பாதிப்புகளின் அடிப்படையில் பருவமழை காலங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளாக 195 கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் இந்தாண்டு பருவமழை காலங்களில் பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்பகுதியில் பேரிடர் மேலாண்மை குழுக்கள், அரசு அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டுள்ளார். பருவமழை பாதிப்புகளை தவிர்க்க மாவட்ட அளவில் ஒரு குழுவும், ஒவ்வொரு வருவாய் கோட்டங்களுக்கும் ஒரு மாவட்ட வருவாய் அலுவலர் நிலை அலுவலரும், ஒவ்வொரு வட்டங்களுக்கும் ஒரு துணை ஆட்சியர் நிலை அலுவலரும், மாவட்டத்தில் உள்ள 50 சரகங்களுக்கும் தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் நிலை அலுவலர்களும் மண்டல அலுவலர்களாக நியமனம் செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் பேரிடர் பாதிப்புகளின்போது பொதுமக்களை தங்க வைப்பதற்கு ஏதுவாக 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் உட்பட 251 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் பல்வேறு பணிகள் முடுக்கி விடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெடுஞ்சாலைத்துறை மூலம் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பூதலூர், திருவிடைமருதூர், கும்பகோணம், திருவையாறு, பாபநாசம் ஆகிய பகுதிகளில் தலா 10 பேர் அடங்கிய 80 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மீட்பு பணிக்கு தேவையான ரப்பர் படகு, மரம் அறுவை கருவி, கயிறு, மண்வெட்டி, பாதுகாப்பு உடைகள் என அனைத்து மீட்பு பொருட்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் 349 பாலங்கள், 5,258 சிறு பாலங்கள் ஆகியவற்றில் சேதம் ஏற்படாமல் தடுக்க 9,560 மணல் மூட்டைகள், 4,170 சவுக்கு குச்சிகள், 76 தடுப்பு கட்டைகள், 43 மரம் அறுக்கும் இயந்திரம், 23 லாரிகள், 21 டிராக்டர்கள், 23 பொக்லைன் இயந்திரங்கள், 15 புல்டோசர்கள், 8 மோட்டார் பம்ப்ஷெட், 7 ஜெனரேட்டர் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 774 பாலங்கள், 10,135 சிறு பாலங்களில் வடகிழக்கு பருவமழையின்போது நீர் தேங்காமல் செல்லும் வகையில் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. அவசர காலங்களில் பேரிடரால் ஆறுகளில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்வதற்கு 83 இடங்களில் 1,42,998 எண்ணிக்கையிலான மணல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் களப்பணிகளின்போது உதவி செய்வதற்காக 2,398 முதல்நிலை கடமையாற்றுபவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

Tags : breaches ,places ,rivers ,storm ,Nivar ,
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...