மதுரை செய்திகள் கடையை உடைத்து திருட்டு

மதுரை ஊமச்சிகுளம் கோல்டன் சிட்டி குடியிருப்பில் வசித்து வருபவர் மீரான் சித்திக் ராஜா (35). ஆனையூர் மெயின்ரோடு உச்சப்பரம்புமேடுவில்  வீட்டு உபயோகப்பொருட்கள் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று, கடையை பூட்டிவிட்டு சென்றவர் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த, மிக்ஸி, செல்போன், டார்ச்லைட், அழகுசாதன பொருட்கள், ரொக்கம் ரூ.2 ஆயிரம் திருடு போயிருந்தது. தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

குடும்ப பிரச்னையில் தற்கொலை

மதுரை கோ.புதூர் சிவணான்டிகோனார் 6வது தெருவை சேர்ந்தவர் புவனேஷ்வரன் (56). குடும்ப பிரச்சனையில் விரக்தியில் இருந்து வந்த இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கியுள்ளார். புதூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஊரணியில் தவறி விழுந்தவர் சாவு

மதுரை அருகே திருமோகூரை சேர்ந்தவர் கர்ணன் (எ) சோலை கர்ணன் (57). கடந்த 14ம் தேதி அங்குள்ள கோயில் அருகே ஹனுமார் ஊரணிக்கு  சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் தலையில் படுகாயமடைந்தார். மதுரை ஜிஹெச்சில் சேர்க்கப்பட்ட கர்ணன் சிகிச்சை பலனின்றி கடந்த 23ம் தேதி இரவு உயிரிழந்தார். ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பெண் தற்கொலை

மதுரை அருகே மாங்குளத்தை சேர்ந்தவர் செந்தில்ராஜா. இவரது மனைவி சரண்யா (26). இவர்களுக்கு திவாகர் என்ற மகனும், சரிதா என்ற மகளும் உள்ளனர். கடந்த இரு மாதங்களாக சரண்யா கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், பல இடங்களில் சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லை எனவும் தெரிகிறது. இதில் விரக்தியடைந்த சரண்யா பூச்சிமருந்தை குடித்து விட்டார். மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

சேவல் சண்டை மூவர் கைது

மேலூர் அருகே பொட்டபட்டி சூக்கண்மாய் பகுதியில் அழகிரிபட்டியை சேர்ந்த கருப்பு, மனோஜ், நல்லிக்கோவில்பட்டியை சேர்ந்த முருகன் ஆகியோர் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தினர். கீழவளவு எஸ்ஐ பாலமுருகன் இவர்களை கைது செய்து, 3 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய சிலரை தேடி வருகின்றனர்.

திருமண ஏக்கத்தில் தற்கொலை

திருமங்கலம் அடுத்த நடுவக்கோட்டையை சேர்ந்தவர் பெரியசாமி (27). ஓட்டலில் வேலை செய்து வந்தார். திருமணமாகாத இவருக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் வரன் அமையவில்லை என கூறப்படுகிறது. மது அருந்தும் பழக்கமுள்ள பெரியசாமி அடிக்கடி குடித்து விட்ட வீட்டிற்கு வந்ததால் பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதில் மனமுடைந்த பெரியசாமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: