நாகர்கோவில், நவ. 25: ஆஸ்டின் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாகர்கோவில் மாநகராட்சி பகுதிக்கு புத்தன் அணை குடிநீர் பணிக்காக குடிநீர் வடிகால் வாரியம் தடிக்காரண்கோணம் முதல் புத்தேரி வரை உள்ள சாலை தோண்டப்பட்டு உள்ளது. இந்த சாலைகளை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்தால் தான் புதிதாக சாலை போடப்படும். ஆனால் குழாய் பதிக்கப்பட்ட பகுதிகளில் முழுமையாக குடிநீர் வடிகால் வாரியம் நெடுஞ்சாலையிடம் ஒப்படைக்காமல் துண்டுதுண்டாக ஒப்படைத்துள்ளது. இதனால் சாலைகள் முழுமையாக போடப்படாமல் மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக கேசவன்புதூர் முதல் அழகியபாண்டிபுரம், தெரிசனங்கோப்பு ஆகிய பகுதிகளில் முழுமையாக சாலைகள் ஒப்படைக்கவில்லை. இதனால் போக்குவரத்து இடையூறும், சாலை விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இந்த சாலையை ஒப்படைக்க குடிநீர் வடிகால் வாரியத்திடமும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறேன்.ஆனால் கோரிக்கையை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இது தொடர்பாக கலெக்டருக்கும் கடிதம் கொடுத்துள்ளேன். ஆகவே அழகியபாண்டிபுரம் கூட்டுகுடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொது மக்கள் பன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தியும், தடிக்காரன்கோணம் முதல் புத்தேரி வரை சாலையை நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்க கோரியும் இன்று(25ம் தேதி) பகல் 12 மணி அளவில் குடிநீர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் எனது தலைமையில் முற்றுகை போராட்டம், உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.