நெல்லை, நவ. 25:நாங்குநேரி தொகுதி அ.சாத்தான்குளம் பஞ்சாயத்து மாயநேரியைச் சேர்ந்த மருதகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அகிலாவுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்தது. இதையறிந்த காங்கிரஸ் பிரமுகர் நாங்குநேரி ரூபி மனோகரன், மாணவியின் வீட்டிற்கு சென்று மருத்துவப் படிப்பை சிறந்த முறையில் மேற்கொள்ள வாழ்த்தி அவரது படிப்புச் செலவுகளுக்கு உதவித் தொகை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அதற்கு கிடைத்த வெற்றிதான் நெல்லை மாவட்டத்தில், குக்கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்த மாணவி அகிலா, எம்பிபிஎஸ் சீட் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. கிராமங்களில் இருந்து டாக்டர்கள் உருவாக வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார். அவருடன், மருதகுளம் ஜெயக்குமார், மாயநேரி கிராம காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர்.