தூத்துக்குடி, நவ.25: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தொழிலாளி மகனுக்கு கருணை அடிப்படையில் அரசு பணிக்கான நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மே 22, 23ம் தேதிகளில் நடந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு, தடியடியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ரூபாயும் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1.5 லட்சம் வீதம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே உத்தரவிட்டார். இதனிடையே இச்சம்பவத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவும் அரசு உத்தரவிட்டிருந்தது.