×

மயான ஊழியரிடம் 5 ஆயிரம் லஞ்சம்: துப்புரவு ஆய்வாளர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

துரைப்பாக்கம்: மயான ஊழியரிடம் 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி துப்புரவு ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் ரஞ்சித் (44). இவர், சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் மண்டலம் 196வது வார்டில் உள்ள ஈஞ்சம்பாக்கம் எரிவாயு தகன மேடையில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருகிறார்.இந்த மயானத்தில் 233 சடலங்களை தகனம் செய்தற்கான பணத்தை பெறுவதற்கு  சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தில் அண்மையில் ரசீதுகளை சமர்ப்பித்துள்ளார். அதை தணிக்கை செய்து பணம் வழங்குவதற்கு, அந்த வார்டின் துப்புரவு ஆய்வாளராக பணிபுரியும் விக்னேஷ்வரன் (31), 5 ஆயிரம் லஞ்சம் தரும்படி கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ரஞ்சித், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் கந்தசாமியிடம் புகார் செய்தார். அதன்பேரில், கந்தசாமி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து, அதை துப்புரவு ஆய்வாளர் விக்னேஷ்வரனிடம் தரும்படி கூறியுள்ளனர். அதன்படி, விக்னேஷ்வரனை நேற்று அவரது அலுவலகத்தில் சந்தித்த ரஞ்சித், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தபோது, மறைந்திருந்த ஆய்வாளர் கந்தசாமி தலைமையிலான போலீசார், விக்னேஷ்வரனை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர், அவர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.

Tags : inspector ,Sanitary ,
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு