சிறுமிகள் பலாத்கார விவகாரம் சம்பவ இடங்களை நேரில் அடையாளம் காட்டிய குற்றவாளிகள் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

வில்லியனூர், நவ. 24: வில்லியனூர் சிறுமிகள் பலாத்கார வழக்கில் வாத்து பண்ணை உரிமையாளர் உள்பட 6 பேர் பாலியல் பலாத்காரம் நடந்த இடங்களை நேரில் அடையாளம் காட்டினர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி, வில்லியனூர், கீழ்சாத்தமங்கலத்தில் 5 சிறுமிகள் வாத்து பண்ணையில் அடைத்து பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக குழந்தைகள் நல பாதுகாப்பு குழு விசாரணை நடத்தியபின் காவல்துறைக்கு புகார் சென்றன. சட்டம்-ஒழுங்கு சீனியர் எஸ்பி பிரதிக்ஷா கொடாரா உத்தரவின்பேரில் எஸ்பி திவ்யா தலைமையில் சிறப்பு குழு பணியமர்த்தப்பட்டு மங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். பின்னர் சிறுமிகள் பலாத்கார வழக்கில் வாத்து பண்ணை உரிமையாளரான கன்னியப்பன் (53), அவரது மகன்கள் ராஜ்குமார் (27), சரத்குமார் (24), சிவா (23), அய்யனார் (22), மூர்த்தி (20) உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர். இதில் பசுபதி என்பவர் கோவிட் பரிசோதனைக்கு கதிர்காமத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார். மற்றொருவர் சிறுவன் என்பதால் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். இதேபோல இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு சிறுவனும் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனிடையே இவ்வழக்கில் சிறுமியின் வளர்ப்பு தந்தை உள்ளிட்ட சிலரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். மேலும் சிறுமியின் தாய் சாந்தி கொலைக்கும், இந்த பலாத்கார வழக்கிற்கும் தொடர்பு உள்ளதா? என்பது தொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் சேகரித்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட கன்னியப்பன் உள்ளிட்ட 6 பேரை காவலில் எடுத்து விசாரிக்க மங்கலம் போலீசார் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் 4 நாள் காவல் விசாரணைக்கு அனுமதி வழங்கியது.  இதையடுத்து நீதிமன்ற ஆணையுடன் காலாப்பட்டு மத்திய சிறைக்கு சென்ற எஸ்பி திவ்யா தலைமையிலான சிறப்பு குழுவினர் வாத்து பண்ணை உரிமையாளர், அவரது 2 மகன்கள் உள்ளிட்ட 6 பேரையும் காவலில் எடுத்து வில்லியனூர் அழைத்து வந்தனர்.

அவர்களிடம் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். விசாரணையில் சிறுமிகளை அவர்கள் பல்வேறு இடங்களில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை சம்பவ இடங்களுக்கு போலீசார் அழைத்து சென்றனர். அதன்படி கோர்க்காடு ஏரிக்கரை, காட்டேரிக்குப்பம், செல்லஞ்சேரி, கடலூர் கூத்தப்பாக்கம் ஆகிய இடங்களுக்கும், கீழ் சாத்தமங்கலத்தில் உள்ள வாத்துப்பண்ணை உரிமையாளரின் வீடு மற்றும் வேறொரு இடத்தையும் அவர்கள் அடையாளம் காட்டினர். இதை தொடர்ந்து இவ்வழக்கில் மேலும் சம்பந்தப்பட்டவர்கள் யார்? அவர்களுக்கு இதில் எந்த வகையில் சம்பந்தம் உள்ளது? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: