குடிநீர் வசதி கோரி சிவகிரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

சிவகிரி, நவ.24: தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள தென்மலை அருந்ததியர்தெருவில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் இன்றி அவதிப்படுகின்றனர். இத்தெருவில் குடிநீர் குழாய் இல்லாததால் பக்கத்து தெருவிற்கு சென்று குடிநீர் குழாயில் குடிநீர் பிடிக்கும் நிலை உள்ளது. எனவே, அருந்ததியர் தெருவில் குடிநீர் குழாய் அமைக்க வலியுறுத்தி சிவகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் திராவிடர் தமிழர் கட்சியினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு திராவிடர் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கருவீரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் குருநாதன், பொதுச் செயலாளர் கதிரவன்,  தென் மண்டல துணைத் தலைவர் ஆதிவீரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாவட்ட வழங்கல் அலுவலர் கோகிலா, சிவகிரி வட்டாட்சியர் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் முத்துத்குமார்., அய்யனார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலரின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு திராவிடர் தமிழர் கட்சியின் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: