சென்னையை சேர்ந்தவர்கள் உட்பட 4 பேர் காட்பாடி கோர்ட்டில் சரண் கடலூர் வாலிபரை ஆந்திராவில் கடத்தி சென்று கொலை

வேலூர், நவ. 24:கடலூர் வாலிபரை கடத்தி ஆந்திராவில் கொலை செய்த வழக்கில் சென்னையை சேர்ந்தவர்கள் 4 பேர் காட்பாடி கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர். கடலூர் செம்மண்டலம் பகுதியை சேர்ந்தவர் அருள்மொழி. இவரது மகன் வினோத்குமார்(27). இவர் சென்னை தண்டையார்பேட்டையில் கால் டாக்சி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். தீபாவளி பண்டிகையை கொண்டாட கடந்த வாரம் வினோத்குமார் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி வீட்டில் தனியாக இருந்த அவரை, 5 பேர் கொண்ட கும்பல் வேனில் கடத்தி சென்றது. இதுகுறித்து வினோத்குமாரின் தந்தை அருள்மொழி, கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் ஆந்திர மாநிலம் கடப்பா அடுத்த ராமாபுரம் பகுதியில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கால்கள் துண்டிக்கப்பட்டு, தலை சிதைந்த நிலையில் இருந்தது. சடலம் அருகில் கிடந்த அடையாள அட்டையை வைத்து ராமாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சடலமாக கிடந்த வாலிபர், கடத்தப்பட்ட வினோத்குமார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காட்பாடி கோர்ட்டில் இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த டெல்லி(33), மகேஷ்குமார்(35), விநாயகம்(36), திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த நாராயணன்(61) ஆகிய 4 பேர் சரணடைந்தனர். இதையடுத்து அவர்களை வேலூர் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Related Stories: