திருச்சி, நவ.23: தமிழ்நாடு சிறப்பு காவல் துறை இயக்குனர் ராஜேஷ்தாஸ் உத்தரவின்படி, திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜெயராம், திருச்சி சரக டிஐஜி ஆனிவிஜயா ஆகியோர் தலைமையில், மாவட்ட எஸ்பி., (பொ) செந்தில்குமார் மேற்பார்வையில், காணாமல் போன நபர்களை கண்டுபிடிக்கும் சிறப்பு முகாம் மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் சிசிடிஎன்எஸ் போர்ட்டல் மூலம் அடையாளம் தெரியாமல் இறந்தவர்களின் அங்க மச்ச அடையாளங்களுடன் ஒப்பிட்டு, காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மத்திய மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் உள்ள அடையாளம் தெரியாத நபர்களின் புகைப்படங்களை ஒருங்கிணைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் காணாமல் போனவர்களின் குடும்ப நபர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரை அழைத்து வந்து இறந்தவர்களின் அங்கமச்ச அடையாளங்களோடு ஒப்பீடு செய்யப்பட்டது.