தஞ்சை, நவ. 23: புயல் எச்சரிக்கை தொடர்ந்து, தஞ்சை மாவட்டத்தில் பயிர்களைக் காக்க விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இதுகுறித்து வேளாண் துறை இணை இயக்குநர் ஜஸ்டின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,புயல் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் 24, 25ம் தேதிகளில் பலத்தக் காற்றுடன் மிக அதிகஅளவு மழை பொழியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நெல் வயல்களில் நீர் பாய்ச்சுவதை நிறுத்தி, வயலில் தேங்கியுள்ள நீரை வடித்து விட வேண்டும். இதர பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளும் வயல்களில் தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்தி விட வேண்டும்.வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், அதிக நீர் வடிந்திடும் வகையில் கிடங்கு வெட்டி வைக்க வேண்டும்.