×

கரூர் காந்தி கிராமத்தில் பரபரப்பு பெண் மர்ம சாவு கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்

கரூர், நவ. 23: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா தாமோதரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரின் மனைவி வெண்ணிலா. இவர் அந்த பகுதியில் ஊராட்சி தலைவராக உள்ளார். இவர்களின் மகள் பவித்ரா(22) என்பவருக்கும் கரூர் வாங்கலை சேர்ந்த பிரகாஷ்குமார் என்பவருக்கும் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. தம்பதியினர் இருவரும் வாங்கல் கடைவீதியில் குடியிருந்து வந்தனர். பிரகாஷ் குமார் கரூரில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே சில நாட்களுககு முன்பு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் மதியம் பிரகாஷ்குமார் கரூருக்கு சென்று விட்டு, வீட்டுக்கு வந்த போது, பவித்ரா தூக்கில் சடலமாக தொங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் வாங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார், பவித்ராவின் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனை மார்ச்சுவரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் பவித்ராவின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் தங்களது மகளின் சாவில் சந்தேகம் உள்ளது. வரதட்சணை கொடுமையும் நடந்திருக்க வாய்ப்புள்ளது, எனவே மகள் மரணம் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கரூர் திருச்சி சாலை காந்திகிராமத்தில் சாலையில் அமர்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டதோடு போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

பசுபதிபாளையம் போலீசார் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டும், சாலை மறியல் கைவிடப்படவில்லை. இதனை தொடர்ந்து டிஎஸ்பி முகேஷ்ஜெயக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு மறியலில் ஈடுபட்டவர்களை அனுப்பி வைத்தார். மேலும் பவித்ராவுக்கு திருமணம் நடந்து 14 மாதங்களே முடிந்துள்ளதால், கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெறவுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே பவித்ரா எப்படி இறந்தார் என்பது குறித்து தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Relatives ,road ,village ,death ,Karur Gandhi ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பரிதாபம் சாலையை கடக்க முயன்ற பெண் பைக் மோதி பலி