×

கீழக்கரை பகுதியில் போதை பொருளால் சீரழியும் இளைஞர்கள்,மாணவர்கள்

கீழக்கரை. நவ.23: கீழக்கரையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை வெளியூரிலிருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறார்கள். இதற்காக உள்ளூரிலும் சில ஏஜெண்ட்கள் செயல்பட்டு வருகிறார்கள். இதனை தடுக்க அதிகாரிகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தாலும், கடுமையான தண்டனை வழங்கி வந்தாலும் சட்டவிரோத போதை பொருட்கள் விற்பனையும், ஊடுருவலையும் தடுக்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் இதற்கு பிண்ணனியில் இருக்கும் போதைப்பொருள் பிரமுகர்கள் தான். கீழக்கரையில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து நடக்கும் போதை பொருட்கள் கஞ்சா மற்றும் ஐஸ் எனப்படும் ஒரு வகை போதை பொருள் புழக்கம் வெகு வேகமாக அதிகரித்துள்ளது.

வேகமாக பரவி வரும் போதை கலாச்சாரத்தால் சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். கீழக்கரை அருகே தோட்டங்களில் போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் போதை பொருள் வியாபாரிகளிடம் வைத்துள்ள நட்பால் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களையும் சீரழித்து வருகின்றனர். சிறுவர்கள் போதை பொருட்களின் விளைவுகளை தெரியாமல் அதை வாங்கி சென்று பொழுது போக்காக பயன்படுத்துகின்றனர். அதேபோன்று சில பெட்டி கடைகளில் சட்டவிரோத போதை பொருட்களின் விற்பனையும் நடைபெறுகிறது.

இந்த விற்பனை இரவு நேரங்களில் அதிகளவில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஆசை வார்த்தை காட்டி சட்டவிரோதமாக சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட வைக்கின்றனர். பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் வியாபாரத்தை நடத்தி வருகின்றனர். இவ்வாறு, வியாபாரம் செய்யும் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் தங்களையும் எந்நேரமும் போதையில் வைத்துள்ளனர். மாணவர்களை குறிவைத்து நடக்கும் போதை பொருள், சட்ட விரோத மது விற்பனையால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. உடன் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Lower Coast ,
× RELATED எண்ணற்ற தொழில் உருவாக தென்னை தொழிலை...