திருப்பூர், நவ. 23: பா.ஜ.வின் வேல் யாத்திரையை தடை செய்ய கோரி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் 61 பேர் திருப்பூரில் போலீசாரின் தடையை மீறி ஊர்வலம் சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். பா.ஜ.வின் வேல் யாத்திரையை தடை செய்ய கோரி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் திருப்பூர் ‘பெரியார் கைத்தடி ஊர்வலம்’ என்ற பெயரில் ஊர்வலம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் இந்த ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் தடையை மீறி திருப்பூர் கலெக்டர் அலுவலத்திலிருந்து ‘பெரியார் கைத்தடி ஊர்வலம்’ என்ற பெயரில் கைத்தடிகளுடன் ஊர்வலம் சென்ற 61 பேரை தெற்கு போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்த ஊர்வலத்தை தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் முத்துக்குமார், திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் முகில்ராசு ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இதில் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித் தமிழர் பேரவை, தலித் விடுதலை கட்சி, மே 17 இயக்கம், தமிழ்ப்புலிகள் கட்சி, திராவிட தமிழர் கட்சி, திருவள்ளுவர் பேரவை, மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பா.ஜ.வின் வேல் யாத்திரைக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
கைதான 61 பேரும் தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதனால் பல்லடம் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.