×

கேளம்பாக்கம் அருகே பெண் சாவில் மர்மம்: உறவினர்கள் சாலை மறியல்

திருப்போரூர். செம்மஞ்சேரி பகுதியில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றிவரும் தினேஷ்ராம், கல்பாக்கம் பகுதியை சேர்ந்த சௌமியா இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. ஆறு வயதில் பெண் குழந்தை உள்ளது.  கேளம்பாக்கம் அருகே ஜோதி நகர் பகுதியில்  கடந்த 7 ஆண்டுகளாக தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பாலசந்தர், அவரது  மனைவி தமிழ்ச்செல்வி, மற்றும் மகன் தினேஷ்ராம், மருமகள் சௌமியா (27 )  ஆகியோர் வசித்து வருகின்றனர். சில ஆண்டுகளாக சௌமியாவை அவரது கணவர் தினேஷ் ராம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த மாதம் சௌமியாவின் தகப்பனார்  ₹ 1 லட்சம் கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சௌமியா அவர்களது அம்மா, அப்பா இருவரிடமும் செல்போனில் பேசியுள்ளார். நேற்று காலை 11 மணி அளவில் சௌமியா இறந்துவிட்டதாக மருமகன் அலைபேசியில் கூறி விட்டு போனை துண்டித்து விட்டார். பின்னர் நேரில் வந்து பார்த்தபோது உங்க மகள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியுள்ளார். சௌமியாவின் பெற்றோர் கதறி அழுதபடி  உள்ளே சென்று பார்த்தபோது இடது கையில் கத்தியால் அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

துப்பட்டாவில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய அடையாளம் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் சௌமியாவை அடித்து கொலை செய்து விட்டதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோவளம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கேளம்பாக்கம் போலீசார் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து. சௌமியாவின் பெற்றோர் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கேளம்பாக்கம் போலீசார் சௌமியாவின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சௌமியாவின்  கணவர் தினேஷ்ராம், அவரது மாமனார் பாலச்சந்தர், இருவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : death ,Kalambakkam ,
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு