அண்ணாநகர், நவ.22: சென்னையை சேர்ந்த சாந்தி (45), குடும்பத்துடன் லண்டனில் வசிக்கிறார். இவரது 17 வயது மகள், அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், அச்சிறுமி கடந்த சில மாதங்களாக கோபமாக பேசுவதும், ஆண்கள் போல் உடையணிந்து கொள்வதும், பலமணி நேரம் பூட்டிய அறைக்குள் தனிமையில் இருப்பதுமாக இருந்துள்ளார். இதை பார்த்து வேதனையடைந்த பெற்றோர், அவள் படிக்கும் பள்ளி நிர்வாகம் மூலம் கவுன்சலிங் கொடுத்தனர். அப்போது, கடந்த 2014ம் ஆண்டு பள்ளி விடுமுறையின்போது, சென்னை அண்ணாநகரில் வசிக்கும் சின்ன தாத்தா கிஷான் சந்த்தலானி (68) வீட்டிற்கு சென்றதாகவும், அப்போது, அவர் அடிக்கடி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பெண்ணாக இருப்பதால்தானே பாலியல் தொல்லை செய்கிறார் என்பதால், மன உளைச்சலில் ஆண் உடை அணிந்து தனிமையில் இருந்ததாக, சிறுமி கூறியுள்ளார்.