மணப்பாறை, நவ.22: திருடிச் சென்ற லாரி, 50 கிலோ மீட்டர் துரத்தி சென்று சினிமா பாணியில் போலீசார் மடக்கி பிடித்தனர். திருச்சி மாவட்டம். மணப்பாறை அருகே முத்தப்புடையான்பட்டியை சேர்ந்தவர் நாகப்பன் (43). இவர், அதே பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை இவரது அரிசி ஆலை முன்பு நின்றிருந்த லாரியை மர்ம நபர் ஒருவர் திருச்சி பைபாஸ் ரோட்டில் கடத்தி சென்றார். இதனை கண்ட ஆலையின் கேசியர் குமார், ஊழியருடன் டூவீலரில் துரத்தி சென்றனர். அப்போது அந்த மர்ம ஆசாமி மறவனூர் பிரிவில் விராலிமலை ரோட்டை நோக்கி லாரியை திருப்பியபோது கேசியர் குமார் லாரியின் பின்பக்கதில் சாமர்த்தியமாக ஏறினார்.
பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அனைத்து செக்போஸ்ட்டுகளும் உஷார்படுத்தப்பட்டன. லாரியை விராலிமலை வரை கடத்திச்சென்ற அந்த மர்ம நபர் திருச்சி ரோட்டில் உள்ள சுங்கசாவடி தடுப்பை உடைத்து கொண்டு நிற்காமல் சென்றது. வேகமாக சென்ற லாரியை மணிகண்டம் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தியும் நிற்கவில்லை. ராம்ஜி நகர் போலீஸ் மற்றும் ஆலை ஊழியர்களும் லாரியை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தனர். மின்னல் வேகத்தில் லாரியை ஓட்டிச் சென்ற அந்த மர்ம நபர் திருச்சி பால்பண்ணையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக நின்று கொண்டிருந்த கார் மீது இடித்து நின்றது.
அப்போது அந்த மர்ம நபரை மடக்கி பிடித்தனர். இதன் பின்னர் மணப்பாறை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்ட மர்ம நபரிடம் விசாரணை நடத்தியதில் பிச்சைமணி விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், சென்னையில் லாரி டிரைவராக வேலை செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும் லாரியை கடத்திய மர்ம நபர் முன்னுக்கு பின் முரணாக பேசுவதால், போலீசார் தொடர்ந்து அவனிடம் விசாரித்து வருகின்றனர்.