×

18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பெயர் சேர்க்க கலெக்டர் வேண்டுகோள் கிறிஸ்தவ தேவாலயங்கள் பராமரிப்பு அரசு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்

கரூர், நவ. 22: கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ள அரசு நிதி உதவி வழங்கும் திட்டம் குறித்து கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டில் சொந்த கட்டிடத்தில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016- 17ம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருக்க வேண்டும். தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டில் இருந்து எந்தவித உதவியும் பெற்றிருத்தல் கூடாது, சான்றிதழ் (பிற்சேர்க்கை அளிக்க வேண்டும்).

சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும். விண்ணப்ப படிவத்தை பிற்சேர்க்கை 111ல் உள்ளவாறு சான்றிதழ் மற்றும் அனைத்து உரிய ஆவணங்களுடன் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியில் (www.bcmbcmw.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் தேலாலய கட்டிடத்தின் பழமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு 10- 15 ஆண்டுகள் வரை இருப்பின் ரூ. 1 லட்சமும், 15- 20 ஆண்டுகள் இருந்தால் ரூ. 2 லட்சமும், 20 ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் ரூ. 3லட்சமும் நிதியுதவி வழங்கப்படுகிறது. கலெக்டர் தலைமையிலான குழு அந்த விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்களை கள ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல ஆணையருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும்,.

நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். எனவே கரூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலய நிர்வாகிகள் இந்த திட்டத்தினை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...