கோவை, நவ. 22: கோவை அவினாசி சாலை பீளமேடு ஹோப் காலேஜ் சிக்னலில் இருந்து தண்ணீர்பந்தல், விளாங்குறிச்சி வழியாக சரவணம்பட்டி சென்றடையும் சாலையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இந்த சாலையில் உள்ள ரயில்வே கேட் நாள்தோறும் 38 முறை திறந்து மூடப்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், ரயில்வே கேட் அருகே உயர்மட்ட பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதை, சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கார்த்திக் நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர், நிருபர்களிடம் கூறியதாவது: இந்த உயர்மட்ட மேம்பாலம், கட்டுவதற்கு கடந்த 2010-ம் ஆண்டு, தி.மு.க. ஆட்சியின்போது சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.