மைனர் பெண்ணை கடத்தி சென்ற வாலிபரை கைது செய்ய கோரி எஸ்பி.யிடம் புகார்

ஈரோடு, நவ.22: திங்களூரில் மைனர் பெண்ணை கடத்தி சென்ற வாலிபரை 40 நாள் ஆகியும் போலீசார் கைது செய்யாமல் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு எஸ்பி.யிடம் புகார் மனு அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சீனாபுரம் செல்லம்பம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி (47). தறிப்பட்டறை தொழிலாளி. இவர் நேற்று 10க்கும் மேற்பட்டோருடன் எஸ்பி. தங்கதுரையிடம் புகார் மனு அளித்தார். பின்னர் அவர் கூறியதாவது: எனது மனைவி சுமதி. எனக்கு 19 வயதில் மகன், 17 வயதில் மகள் உள்ளார். மகள் 12ம் வகுப்பு படித்து விட்டு, கோபி தனியார் கல்லூரியில் முதலாமாண்டு சேர்த்துள்ளேன். கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்காததால் வீட்டில் இருந்து வந்தார். எனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி நல்லக்காபாளையத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், எங்கள் கண் முன்னே கடந்த மாதம் 14ம் தேதி கடத்தி சென்று விட்டார்.

 இது குறித்து திங்களூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தோம். போலீசாரும் கடத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் எனது மகள், எங்களிடம் வர தயக்கம் காட்டியதால், கோவையில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். என் மகளை கடத்தி சென்று 40 நாள் ஆகியும், அந்த வாலிபரை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. மாறாக திங்களூர் எஸ்.ஐ. பழனிச்சாமி, அந்த வாலிபருக்கு ஆதரவாக செயல்பட்டு, எங்களை ஏளனமாக பேசுகிறார். எனவே, மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து மகளை கடத்தி சென்ற வாலிபரை உடனடியாக கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: