வில்லியனூர், நவ. 22: சிறுமிகள் பலாத்கார வழக்கில் வாத்து பண்ணை உரிமையாளர் உள்பட 6 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி வில்லியனூர் கீழ்சாத்தமங்கலத்தில் 5 சிறுமிகளை வாத்து பண்ணையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சட்டம்-ஒழுங்கு சீனியர் எஸ்பி பிரதிக்ஷா கொடாரா உத்தரவின்பேரில் எஸ்பி திவ்யா தலைமையில் சிறப்பு குழு பணியமர்த்தப்பட்டு மங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.இவ்வழக்கில் வாத்து பண்ணை உரிமையாளரான கன்னியப்பன் (53), அவரது மகன்கள் ராஜ்குமார், சரத்குமார்(24) மற்றும் சிவா (23), அய்யனார் (22), மூர்த்தி (20) உள்பட 8 பேரை கைது செய்தனர். இதில் பசுபதி என்பவர் கோவிட் பரிசோதனைக்கு கதிர்காமத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார். மற்றொருவர் சிறுவன் என்பதால் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். இவ்வழக்கில் சிறுமியின் வளர்ப்பு தந்தை உள்ளிட்ட சிலரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். மேலும் சிறுமியின் தாய் சாந்தி கொலைக்கும், இந்த பலாத்கார வழக்கிற்கும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர்.