திருவண்ணாமலை, நவ.22: பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில், முறைகேடாக பயன்பெற்றவர்கள், பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் குற்றவியல் நடவடிக்ைக எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6 ஆயிரம் வழங்கும் பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில், போலி விவசாயிகள் முறைகேடாக நிதியுதவி பெற்ற சம்பவம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், கிசான் திட்டத்தில் நிதியுதவி பெற்ற போலி விவசாயிகளிடம் இருந்து, பணத்தை திரும்ப வசூலிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 43,323 தகுதியற்ற நபர்கள் முறைகேடாக நிதியுதவி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து வேளாண்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் காவல்துறை மூலம் தொகையை திரும்ப வசூலிக்கும் பணி நடந்து வருகிறது.
மாவட்டம் முழுவதும் இதுவரை சுமார் 11 கோடி திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது. இன்னும் சுமார் 7 ஆயிரம் பேர் முறைகேடாக பெற்ற பணத்தை திரும்ப அரசு வங்கிக்கணக்கில் செலுத்தவில்லை என சமீபத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் தெரியவந்தது. எனவே, வரும் 26ம் தேதிக்குள் தகுதியற்ற பயனாளிகள் தாங்கள் பெற்ற பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால், சட்ட ரீதியான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.