பாதுகாப்பு கேட்டு எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

கள்ளக்குறிச்சி, நவ. 21: சின்னசேலம் அருகே நைனார்பாளையம் காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன். இவர் கிணறு வெட்டும் வேலை செய்து வருகிறார். தற்போது மணலூர்பேட்டை அருகே ஜம்பை கிராமத்தில் வெள்ளையன் கிணறு வெட்டும் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் குமரேசன்(27). பொறியியல் பட்டதாரி. இந்நிலையில் குமரேசன் தன் தந்தையை பார்ப்பதற்காக அடிக்கடி ஜம்பை கிராமம் சென்று வந்ததாக தெரிகிறது. அப்போது சென்னை நீலாங்கரையை சேர்ந்த பார்கவி(20) என்பவர் ஜம்பையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பார்கவிக்கும், குமரேசனுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இது தெரிந்த பார்கவியின் உறவினர்கள் இருவரையும் கண்டித்ததாக தெரிகிறது. மேலும் பார்கவியை சென்னைக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் பார்கவியும், குமரேசனும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கோயிலில் நேற்று முன்தினம் திருமணம் செய்துகொண்டனர். மேலும் இருவரும் நேற்று காலை கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து மனுவை விசாரித்த தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Related Stories: