வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க கட்சியினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும்

திருப்பூர், நவ.21:  திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் ஆணையத்தால் 1-1-2021 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும் 1.1.2003 தேதிக்கு முன்பு பிறந்தவர்கள் அனைவரும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, நவம்பர் 21, 22, 28, 29 மற்றும் டிசம்பர் 5, 6, 12, 13ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இக்கால அவகாசத்தில் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, நீக்க, திருத்தம், முகவரி மாற்றம் போன்ற பணிகளுக்கு தேர்தல் அலுவலர், வாக்குச்சாவடி மைய அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுத்து ஒப்புகை சீட்டு பெற்று கொள்ளலாம். இது மட்டுமின்றி ஆன்லைன் மூலமும் www.nvsp.in பதிவு செய்து குறுச்செய்தி மூலம் பதிவை உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம்-6, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய படிவம்-7, வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய படிவம்-8, ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், புதிய குடியிருப்பில் முகவரி மாற்றம் செய்ய படிவம்-8ஏ பயன்படுத்த வேண்டும். தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ள கோட்டாச்சியர், வட்டாச்சியர், நகராட்சி, வாக்குச்சாவடி மைய அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர் ஆகியோர்களிடம் சென்று தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். முகாம் நடைபெற இருக்கும் நாட்களில் கட்சியினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி, வாக்காளர் பட்டியலில் சரியான நபர்களை சேர்க்க, நீக்க தீவிரமாக வீடு, வீடாக சென்று அயராது களப்பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளனர்.

Related Stories: