சேலம், நவ.21: சேலம் மத்திய மாவட்டத்தில் இன்று 300 இடங்களில் நடைபெறும் ‘தமிழகம் மீட்போம்’ சிறப்பு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘தமிழகம் மீட்போம்’ என்ற சிறப்பு பொதுக்கூட்டத்தை ஆன்லைன் மூலம் நடத்தி வருகிறார். அதன்படி, இன்று (21ம் தேதி) சேலம் மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது. மாலை, 4 மணிக்கு தொடங்கும் இந்த பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து ெகாண்டு உரையாற்றுகிறார்.
சேலம் மத்திய மாவட்டத்தில் 18 திருமண மண்டபங்களில் கூட்டத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சேலம் மாநகரம், ஓமலூர், காடையாம்பட்டி என சுமார் 300 இடங்களில் பெரிய திரை மூலம், பொதுமக்களுக்கு பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவுள்ளது. அதேசமயம், திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி, சேலம் 5 ரோடு ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நடக்கிறது.இந்தசிறப்பு பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சேலம் மத்திய மாவட்டத்தில் உள்ளஒன்றிய, பகுதி, பேரூர், கோட்ட கழக, ஊராட்சி பகுதிகளில் உள்ள நிர்வாகிகள், முன்னோடிகள் செய்துள்ளனர். எனவே, பொதுமக்கள், தொண்டர்கள், இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.