தென்தாமரைகுளம், நவ.21: தொன்தாமரைகுளம் அருகே டாஸ்மாக் கடை ஷட்டரில் துளைபோட்டு கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. அங்கு R30 மட்டுமே இருந்ததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகிலுள்ள சோட்டப்பணிக்கன் தேரிவிளையில் டாஸ்மாக் மதுபான கடை ஒன்று உள்ளது. நேற்று காலை அப்பகுதியில் சென்றவர்கள் டாஸ்மாக் கடையின் ஷட்டரை மிஷினால் அறுத்து துளை போட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி அவர்கள் தென்தாமரைகுளம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். டாஸ்மாக் மேலாளர் தென்தாமரைகுளத்தை சேர்ந்த பாஸ்கரன் தம்பிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலாளர் மற்றும் கடை ஊழியர்களும் அங்கு வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், மர்ம நபர்கள் நள்ளிரவு டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். பின்னர் கடை முன்பு எரிந்து கொண்டிருந்த மின்சார பல்பை கழட்டி விட்டு அதிலிருந்து மின்சாரம் எடுத்து இரும்பை அறுக்கும் கருவியால் டாஸ்மாக் கடையின் ஷட்டரின் முன்பகுதியில் சதுரமாக துளை போட்டுள்ளனர். அந்த துளைவழியாக கடைக்குள் புகுந்துள்ளனர். கடைக்குள் சென்று பார்த்த போது பட்டறையில் ₹30 மட்டும் இருந்துள்ளது. அதை எடுத்துள்ளனர். கடையிலிருந்த அனைத்து மது பாட்டில்களும் அப்படியே இருந்தன. திருட்டு நடக்கும் போது ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் அவர்கள் தப்பி சென்று இருக்கலாம் அல்லது டாஸ்மாக் கடையில் அதிக அளவில் பணம் இருக்கும் என்ற நோக்கத்தில் திருட வந்திருக்கலாம் என்றும் போலீசார் கூறினர். மேலும் இந்த சம்பவம் குறித்து தென்தாமரைகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.