கன்னியாகுமரி, நவ.21: அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் கொட்டாரத்தில் நடந்தது. திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரைபாரதி தலைமை வகித்தார். பேரூர் செயலாளர்கள் வைகுண்ட பெருமாள், குமரி ஸ்டீபன், பாபு, மாடசாமி, பூவியூர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ கலந்துகொண்டு பேசியதாவது: சட்டமன்ற தேர்தல் ஐந்து மாதத்தில் வர இருக்கிறது. தேர்தலில் நாம் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்று மெத்தனமாக இருக்க கூடாது. இப்போதே நாம் தேர்தல் பணியை தொடங்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக நாம் தொடர்ந்து எதிர்க்கட்சியாக இருந்து வருகிறோம்.
எனவே இந்த முறை வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பாடுபட வேண்டும். புதிய வாக்காளர் சேர்க்கை பணியில் திமுகவினர் தீவிரமாக ஈடுபட வேண்டும். குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற இன்று முதல் நம் அயராது பாடுபட வேண்டும் என்றார். கூட்டத்தில் ஆஸ்டின் எம்எல்ஏ, வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன், மாவட்ட துணை செயலாளர் முத்துசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் சாய்ராம், வக்கீல் பால ஜனாதிபதி, பேராசிரியர் டி.சி.மகேஷ், பொறியாளர் அணி அமைப்பாளர் பார்த்தசாரதி, மாணவரணி துணை அமைப்பாளர் பிரேம்ஆனந்த், மாவட்ட பிரதிநிதி நாஞ்சில்மைக்கேல், உட்பட பலர் கலந்து கொண்டனர்.