குடியாத்தம், நவ.21:குடியாத்தம் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் அதே பகுதியில் சொந்தமாக போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கே.வி.குப்பம் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு போட்டோ எடுக்க சென்றிருந்தார். பின்னர் இரவு வீடு திரும்பினார். அவரது வீட்டின் அருகில் சென்றபோது, பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 3 இளைஞர்கள், அவருக்கு உதவுவது போல் நடித்து ₹4 லட்சம் மதிப்பிலான கேமராவை பறித்து சென்றுள்ளனர். இதனால் போட்டோகிராபர் மோகன் சிறிது தூரம் அவர்களை விரட்டி சென்றார். ஆனால் அவர்கள் தப்பிவிட்டனர்.இதுகுறித்த புகாரின்பேரில், குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.