மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 47 ஆயிரத்தை கடந்தது

கோவை, நவ. 20: கோவையில் கொரோனா காரணமாக நேற்று 149 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47 ஆயிரத்தை கடந்துள்ளது. கோவை மாவட்டத்தில்  கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில், நேற்று கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியில் புதியதாக 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 71-ஆக உயர்ந்துள்ளது. மேலும், தற்போது கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களை விட குணமடைந்து வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 183 பேர் முழுமையாக குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 693ஆக உள்ளது. தற்போது, கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ., தனியார் மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 785 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். தவிர, நேற்று கொரோனா தொற்றினால் யாரும் உயிரிழக்கவில்லை. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை என்பது 593-ஆக உள்ளது.

Related Stories: