கலைஞர் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி துவக்கி வைத்தார்

புதுச்சேரி, நவ. 13:  புதுவையில் கலைஞர் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டத்தை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி நேற்று துவக்கி வைத்தார். புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் கலைஞர் கருணாநிதி காலை சிற்றுண்டி திட்ட துவக்க விழா காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. முன்னதாக  கலைஞர் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.  பள்ளி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு வரவேற்றார்.  முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கினார். கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். திமுக மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி திட்டத்தை துவக்கி வைத்து, மாணவர்களுக்கு 2 இட்லி, வெண்பொங்கல், கேசரி, சாம்பர் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், கலைஞர் பெயரில் காலை சிற்றுண்டி திட்டம் முதல்வர்  நாராயணசாமியின் பெருமுயற்சியால் துவக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  

கலைஞருக்கும், புதுச்சேரிக்கும் தொடர்பு இருப்பதை மக்கள் அறிவீர்கள். புதுச்சேரி வீதியில் அடித்து, நொறுக்கிஎறியப்பட்டு, பெரியாரால் அடையாளம் காணப்பட்டு, இந்தியாவுக்கே வழிகாட்டியாக கலைஞர் விளங்கியதற்கு இந்த மண்ணும் ஒரு காரணம்.  நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை,  தெருவுக்கு கலைஞர் பெயரும், பல்கலைக்கழத்தில் ஒரு இருக்கையும், கலைஞருக்கு சிலையும் அமைக்க முடிவு செய்தார். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திமுக நன்றி மறவாத கட்சி, திமுக உறவுக்கு கை கொடுக்கும். கலைஞருக்கு அரசியல் ஆசானாக இருந்தவர் ஜீவானந்தம், அவரது பெயரில் செயல்படும் பள்ளியில் சிற்றுண்டி திட்டம் துவக்கி வைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  

 திமுக வலிய எந்த சண்டைக்கும் போகாது, அதேசமயம் வந்த சண்டையையும் விட்டதில்லை. மிக விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ள தலைவர் கலைஞர் அவர்களின் பெயரிலான காலை உணவு திட்டம்  தமிழகத்திலும் தொடங்கப்படும்.

 பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை காமராஜர்தான் கொண்டுவந்தார். பின்னர் அது சத்துணவு திட்டமாக மாறியது. கலைஞர் ஆட்சிக்கு வந்தபோது வாரத்திற்கு 5 முட்டைகளை வழங்கச் செய்தார். நாட்டிலேயே மாணவர்களுக்கு 5 முட்டைகளை வழங்கச் செய்த ஒரே முதல்வர் கலைஞர்தான். அவரது பெயரில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளதற்கு மீண்டும் ஒருமுறை திமுக சார்பிலும்,  கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் சார்பிலும்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

 சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், வைத்திலிங்கம் எம்பி, ஜான்குமார் எம்எல்ஏ, காங்., மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், திமுக அமைப்பாளர்கள் சிவா எம்எல்ஏ, எஸ்.பி.சிவக்குமார், நாஜிம், முன்னாள் எம்பி திருநாவுக்கரசு, இணை இயக்குநர் மைக்கேல் பெனோ மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: