புதுச்சேரி, நவ. 13: புதுவையில் நேற்று புதிதாக 66 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறுகையில், புதுச்சேரியில் நேற்று 3,545 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவை-50, காரைக்கால்-6, ஏனாம்-1, மாகே-9 என மொத்தம் 66 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், வெங்கட்டா நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்த 58 வயது பெண் ஜிப்மரிலும், காரைக்கால் திருநள்ளாறு பகுதியை சேர்ந்த 82 வயது மூதாட்டி காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 607 ஆக உணர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.68 சதவீதமாகவும் உள்ளது.