விருத்தாசலத்தில் காலி குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம், நவ. 11: விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட கஸ்பா தெருவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியின் கடைசி பகுதியில் உள்ள பாரதி நகர் பகுதியில் கடந்த பல மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து விருத்தாசலம் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்ததால் நேற்று 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது நகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்து ஆய்வு செய்வதாகக் கூறி அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் திரும்பி சென்ற அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு சென்ற பிறகு நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் யாரும் வராததால் குடிநீர் குழாய் அருகில் காலி குடங்களுடன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், தொலைபேசியில் தொடர்பு கொண்ட நகராட்சி அதிகாரிகள் நாளை (இன்று) உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: