×

தேவர் ஜெயந்தியையொட்டி வழிமாறி பேரணி வந்த தகராறில் 3 பேர் கைது

திருச்சி, நவ. 1: திருச்சியில் தேவர் ஜெயந்தியையொட்டி வழிமாறி பேரணி வந்த தகராறில் உறையூரை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சியில், பொன் முத்துராமலிங்க தேவரின் 113வது தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையொட்டி நேற்று முன்தினம் சீராத்தோப்பு பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி சூபர்வைசர் பிரேம்குமார் (23) தலைமையில் 16 பேர் வயலூரில் இருந்து புறப்பட்டு மத்திய பஸ் நிலையப்பகுதியில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க பைக்கில் வந்தனர். அப்போது அதில் 3 பேர் வழிமாறி உறையூர் பாண்டமங்கலம் முஸ்லிம் தெரு வழியாக வந்தனர். மற்றவர்கள் வரட்டும் என அங்கு காத்திருந்த போது, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டு ரீப்பர் கட்டையால் தாக்கினர். இதில் ஊர்வலம் வந்த 3 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டதை அடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் முஸ்லிம் தெருவை சேர்ந்த அப்பாஸ் (27), பிலால் (20), முஜிபுரிரகுமான் (20) ஆகிய 3 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசராணை நடத்தினர். இதற்கு முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து குவிந்ததால் நேற்று முன்தினம் இரவு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் துணை கமிஷனர்கள் பவன்குமார் ரெட்டி , வேதரத்தினம், ரங்கம் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உறையூர் போலீசார் பிலால், முஜ்பூர் ரகுமான், அப்பாஸ் ஆகிய 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர்.

Tags : rally ,Devar Jayanthi ,
× RELATED அர்ஜெண்டினாவில்...