×

வேதாரண்யம் அருகே சுதந்திரமாக பறந்து திரிந்த 3 பச்சை புறாக்கள் இறப்பு

வேதாரண்யம், நவ.1: வேதாரண்யம் அருகே சுற்றித்திரிந்த 3 பச்சை புறாக்கள் தனியார் தோட்டத்தில் இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த வேதமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 3 பச்சை புறாக்கள் இறந்து கிடந்தன. இதுகுறித்து கோடியக்கரை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனவர் சதீஷ்குமார் மற்றும் வனத்துறையினர் இறந்து கிடந்த 3 பச்சை புறாக்களை கைப்பற்றி வேதாரண்யம் கால்நடை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த புறாக்கள் சுதந்திரமாக அந்த கிராமத்தில் சுற்றி திரிந்ததாம். யாராவது பறவைகளை வேட்டையாடும்போது துப்பாக்கியால் சுட்டார்களா அல்லது விஷம் வைத்துகொன்று விட்டார்களா என அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் இருந்தது. மருத்துவ பரிசோதனையில், 3 புறாக்களும் நுரையீரல் நோய் தொற்றால் இறந்து விட்டதாக கால்நடை மருத்துவர் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Death ,Vedaranyam ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்