மேட்டூர், அக்.30: சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களை இணைக்கும் வகையில் காவிரியின் குறுக்கே பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆய்வு பணியின்போது தர்மபுரி, சேலம் எம்.பி.க்கள் தெரிவித்தனர். தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில்குமார், சேலம் எம்பி பார்திபன், முன்னாள் எம்எல்ஏ கோபால் ஆகியோர் நேற்று கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் கோட்டையூர் பரிசல்துறை பகுதியில் காவிரி ஆற்றில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் காவிரி நீர் பச்சை நிறத்துடன், கடும் துர்நாற்றம் வீசியது. பாறைகளில் ஊதா நிறத்தில் படிவங்கள் படிந்திருந்தது. சுமார் ஒரு மணி நேர ஆய்வுக்கு பின்பு, எம்.பி.க்கள் டாக்டர் செந்தில்குமார், பார்திபன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது, அவர்கள் கூறியதாவது:கொளத்தூர் ஒன்றியம் கோட்டையூரில், காவிரி நீர் நிறம் மாறி துர்நாற்றம் வீசுகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஆலை கழிவுகள் மற்றும் சாக்கடை கழிவுகளை நேரடியாக, காவிரியில் விடுவதுதான் அதற்கு காரணம். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பாறைகள் நிறம் மாறி ஊதா நிறத்தில் காணப்படுகிறது. இதனை தூய்மைப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை. அதிமுக அரசும் கண்டுகொள்ளாத காரணத்தால், கரையோர கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவர்கள், நுரையீரல் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோட்டையூரிலிருந்து மேட்டூர் வரையிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. முதல்வர் மாவட்டத்திலேயே முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.