×

மத்திய கூட்டுறவு வங்கி அலுவலக உதவியாளர் பணிக்கு ₹5 லட்சம் வரை ஆளும் கட்சியினர் பேரம்

சேலம், அக்.30: சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 53அலுவலக உதவியாளர் பணிக்கு ₹5 லட்சம் வரை ஆளுங்கட்சியினர் பேரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 53 அலுவலக உதவியாளர், 4ஓட்டுநர் மற்றும் கூட்டுறவு தொடக்க வேளாண்கடன் சங்கத்தில் காலியாக உள்ள 5 அலுவலக உதவியாளர் என மொத்தம் 62 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என கடந்த கடந்த பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது.   அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் பணியிடத்துக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் ஓட்டுநர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 53 அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு 11,784 பேரும், 4ஓட்டுனர் பணிக் 451 பேரும், இதர 5அலுவலக உதவியாளர் பணிக்கு 417 பேரும் விண்ணப்பித்துள்ளனர்தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விரைவில் நேர்முக தேர்வுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்படவுள்ளது. தகுதி வாய்ந்த விண்ணங்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.  இந்த பணி முடிந்தது நேர்முக தேர்வு நடத்தப்படவுள்ளது. இருப்பினும், அந்தந்த பகுதி ஆளும்கட்சியின் பிரமுகர்கள் கையில் தான் தேர்வு பட்டியல் முடிவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்த பணிக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் 53 அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு 11 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த பணியில் தேர்வு பெற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. நேர்முக தேர்வு இன்னும் நடைபெறாத நிலையில், பணியை பெற ₹5 லட்சம் வரை மறைமுக பேரம் ஜோராக நடந்து வருகின்றன. இதற்காக அந்தந்த பகுதி அதிமுக நிர்வாகிகளிடம் அட்வான்ஸ் தொகையாக ₹3 லட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பணிபெற ஏராளமானோர் அதிமுக நிர்வாகிகளை நாடி செல்கின்றனர். தீபாவளி பண்டிகை  முடிந்ததும் நேர்முக தேர்வு நடத்தி ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளது. எதுவாக இருந்தாலும் ஆளுங்கட்சியினரின் கையில் தான் பட்டியல் முடிவு செய்யப்படுகிறது, என்றனர்.

Tags :
× RELATED கிளி வளர்த்த 3பேருக்கு ₹15 ஆயிரம் அபராதம்